முதியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு – ஆந்திர அரசு!

  • கொரோனா மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.
  • ஆதார் அட்டை இல்லாத முதியோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி, கருப்பு பூஞ்சை, மூன்றாம் அலை ஆகியவை குறித்த முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலத்தால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதில் மனுவில், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், புதிதாக 26,325 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்வதன் மூலம் மூன்றாம் அலையை  திறமையாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் 1,955 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதில் 109 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா மூன்றாம் அலையில் அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆதார் அட்டை இல்லாத முதியவர்களுக்கு கூட கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal