3 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்! நெஞ்சுவலியால் துடித்தவர் உயிரிழந்த பரிதாபம்!

3 மணி நேரம் தாமதமாக வந்ததால், நெஞ்சுவலியால் துடித்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு வயது 65. இவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் வேலைக்கு செல்லாத நிலையில், இரவு குடும்பத்தினருடன் அமர்ந்து, உணவு  சாப்பிட்டுக்கொண்டு இருந்த இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, இரத்த வாந்தி எடுத்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். தொடர்ந்து 10-ற்கும் மேற்பட்ட முறை அழைப்பு விடுத்தும் வராத நிலையில், அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் 3 மணி நேரம் கழித்து 108 வந்துள்ளது. ஆம்புலன்சில் உள்ளவர்கள் பிரகாஷை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதனையடுத்து ஆம்புலன்ஸை முற்றிகையிட முயன்ற பொதுமக்களை, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். கொரோனா சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற அவசரமான சூழ்நிலைக்கு அம்புலன்ஸ் வருவதற்கு மறுப்பதால், அரசு இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.