மணலியில் இருந்து இரண்டு தினங்களில் முழுவதுமாக அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்படும் – மாநகர காவல் ஆணையர்.!

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை நேற்றைய தினம் ஹைதராபாத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதாகவும் , இன்னும் இரண்டு தினங்களில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதனையடுத்து இதே போன்று கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மணலி துறைமுகத்திலும் 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் அதனை ஏலம் எடுத்துள்ளது. அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்றைய தினம் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பியுள்ளனர்.

மீதமுள்ள கன்டெய்னர்கள் விரைவில் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இன்னும் இரண்டு தினங்களில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டே அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.