ஜாதிக்கலவரங்களில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார் – சரத்பவார்!

கடந்த வாரம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வடமேற்கு டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு வேறு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக டெல்லி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு தகர்த்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரணியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் டெல்லியை சாதிக் கலவரங்களில் இருந்து பாதுகாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய அவர், டெல்லி முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் ஏதாவது நடந்தால் அது உலகம் அறியக்கூடிய செய்தியாக மாறும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறெல்லாம் நடந்தால் டெல்லியில் அமைதி இன்றி இருப்பதாக உலகம் கற்பனை செய்து விடும்.  உங்களிடம் அதிகாரம் தான் உள்ளது. ஆனால் டெல்லியை கையாள முடியாது என அமித்ஷாவை குறிப்பிட்டு பேசியுள்ளார் சரத்பவார்.

author avatar
Rebekal