உ.பி-யில் இறந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனை வார்டுக்கு வெளியே விட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்.!

உத்திரப்பிரதேசத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனை வார்டுக்கு வெளியே விட்டு சென்றதால் ,உடலை கைவண்டி உபயோகித்து கொண்டு சென்றுள்ளனர் .

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் உள்ள கான்ஷிராம் காலனியில் வசிக்கும் நசீம் என்ற பெண்ணிற்கு செவ்வாயன்று மார்பு வலி ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸின் உள் இருந்த அவசர மருத்துவ அதிகாரியான டாக்டர் அகிலேஷ் குமாரிடம் பெண்ணை பரிசோதிக்குமாறு குடும்பத்தினர் கேட்டு கொண்டனர் .அதனை தொடர்ந்து பரிசோதித்த மருத்துவர் பெண் இறந்து விட்டதாக அறிவித்துள்ளார் . உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெண்ணின் சடலத்தை மருத்துவமனையின் வார்டுக்கு வெளியே விட்டு விட்டு,அவரது குடும்பத்தினரிடம் வேறோரு வாகனத்தை எடுக்க கூறியுள்ளார் .

இதனை தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் சடலத்தை கை வண்டி உபயோகித்து கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து நடைபெற்று விசாரணையில் ஆம்புலன்ஸ் டிரைவர் அலட்சியம் காட்டியதும் , வார்டுக்கு வெளியே விட்டு சென்றதும் தெரிய வந்தது . அதன் பின் ஆம்புலன்ஸை இயக்கும் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமில்லாமல் தொடர் விசாரணையையும் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி கூறுகையில், இறந்த பெண்ணின் குடும்பத்தினர் சடலத்தை கொண்டு செல்வதற்காக வாகனத்தை மருத்துவமனையிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.