கருப்பு பூஞ்சையை குணப்படுத்தும் ஆம்போடெரிசின் -பி மே 31 முதல் விநியோகம் – விலை எவ்வளவு தெரியுமா?

கருப்பு பூஞ்சையை குணப்படுத்தும் ஆம்போடெரிசின் -பி மே 31 முதல் விநியோகம் – விலை எவ்வளவு தெரியுமா?

கருப்பு பூஞ்சை தொற்று நோயை குணப்படுத்தக் கூடிய அம்போட்டெரிசின் பி எனும் மருந்து விலை ஆயிரத்து 1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு அடுத்த மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதுடன், பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில் கருப்பு பூஞ்சையை குணப்படுத்த அம்போட்டெரிசின் பி எனும் மருந்து தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தின் விலை தற்போது 1200 ரூபாய் என கூறப்பட்டுள்ளதுடன், இந்த மருந்து விநியோகம் வருகிற திங்கட்கிழமை அதாவது மே 31 முதல் தொடங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதாகவும், அடுத்தபடியாக அதிக அளவில் கருப்பு பூஞ்சை தொற்று உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை தொற்று  ஆங்காங்கு காணப்படும் நிலையில் அங்கும் அடுத்த கட்டமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube