தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்!

தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 16வது சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் டெல்லியில் இது குறித்த சில தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார். அதாவது 88,000 வாக்குசாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட கூடிய ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் மட்டுமே வேட்பாளருடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாகனங்களுக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal