#BIGBREAKING : பாபர் மசூதி இடிப்பு வழக்கு ! அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை -நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.இந்த வழக்கில் ,கடந்த 2001 ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது.லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது.இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 32 பேரிடம்  விசாரணை முடிந்தது. அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  யாதவ் அறிக்கை அனுப்பினார்.

இதை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் ( அதாவது செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.இதனால்  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ஆம் தேதி )தீர்ப்பு வழங்கப்படும்  என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32  பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்டோர் காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 பேரில் 26 பேர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள். இந்நிலையில்  2000 பக்க தீர்ப்பை வாசித்தார் எஸ்.கே.யாதவ்.அதில் பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என்று தெரிவித்தார். அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர்.எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக  தீர்ப்பு அளித்துள்ளார்.