மேற்குவங்க முதல்வரின் ஆலோசகராக ஆலாபன் நியமனம்..!

ஆலாபன் பந்தோபத்யாய இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.

மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. தாமதமாக வந்ததுடன் மம்தா பானர்ஜி பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது.

இதைத்தொடர்ந்து,  மத்திய அரசின் இந்த உத்தரவை முதல்வர் மமதா பானர்ஜி ஏற்கவில்லை. இதனை திரும்பப் பெற கோரி மத்திய அரசுக்கு அவர் கடிதம் அனுப்பினார். மேற்கு வங்க தலைமைச் செயலாளரை மத்திய பணிக்கு மாற்றிய ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். மாநில அரசு பணியில் உள்ள அதிகாரியை மத்திய அரசு எப்படி திரும்பப் பெறலாம் என்றும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார் .

இந்திய வரலாற்றிலேயே மாநில அரசு கேட்காமல் தலைமைச் செயலாளர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்படுவதில்லை, மேற்கு வங்கத்தில் புயல் சேத நிவாரணப் பணியில் தலைமைச்செயலாளர் ஆலாபன் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் மத்திய அரசு பழிவாங்கலில்  ஈடுபடுகிறது. அரசு அதிகாரிகளின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தலைமைச் செயலாளருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு கேட்டிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், ஆலாபன் பந்தோபத்யாய இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். ஆலாபன் பந்தோபத்யாயயை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து மம்தா உத்தரவிட்டுள்ளார்.

author avatar
murugan