அதிர்ச்சி… AIMIM டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம்..!

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின்(AIMIM) இன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின் (AIMIM) கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அதன்பின்னர்,ஹேக்கர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயோவில்  அதன் பெயரை AIMIM இலிருந்து ‘எலோன் மஸ்க்’ என்று மாற்றியுள்ளார். மேலும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட கணக்கில் புதிய ட்வீட்டுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிற ட்வீட்களில் கிரிப்டோகரன்சி குறித்த தகவல்களை ஹேக்கர் பதிவிட்டுள்ளார்.

AIMIM இன் டுவிட்டர் பக்கத்தை சுமார் 6.78 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.ஆனால்,இந்த சைபர் தாக்குதலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.எனினும்,இது குறித்து AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.

 

இதேப் போன்று,கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தூர் காவல்துறையின் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டு,பிரதமர் நரேந்திர மோடிக்கு கூறியது போன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றது.அதில் “இலவச காஷ்மீர்”  மற்றும் பாகிஸ்தானைப் பாராட்டி பேசியது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கிடையில், ஏப்ரல் 2021 இல், ஆந்திர அமைச்சர் மெகபதி கௌதம் ரெட்டியின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க சைபர் போலீசாரை அமைச்சர் அணுகியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகின.