அதிமுக – தமாகா பேச்சுவார்த்தை நிறைவு., நாளை இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.!

அதிமுக – தமாகா பேச்சுவார்த்தை நிறைவு., நாளை இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.!

அதிமுக – தமாகா கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதிமுக – தமாகா முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தமாகா கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. அதன்படி, தமிழ் மாநில காங்கிரசுக்கு 6 முதல் 7 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, ஓமலூர், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, காங்கேயம் ஆகிய தொகுதிகளை தமாகா கேட்டதாக கூறப்படுகிறது. நாளை இரவுக்குள் தமாகா தலைவர் ஜிகே வாசன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சைக்கிள் சின்னத்தை பெறுவதே எங்களுடைய தொடர் சட்ட முயற்சி என்றும் அது நடந்துகொண்டு இருக்கிறது எனவும் தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்திருந்தார். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடாத சூழல் ஏற்பட்டால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. கடந்த தேர்தலில் தென்னைமரத்திலும், நாடாளுமன்ற தேர்தலில் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube