பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓபிஎஸ்!

சென்னை:அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,ஜனவரி 3 ஆம் தேதி 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் எனவும்,முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஜனவரி 10 ஆம் தேதி முதல் போடப்படும் என அறிவித்தார்.

அதன்படி,15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து,முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில்,கடந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்களப் பணியாளர் என்ற முறையில்,இன்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்.முதல்வர் சென்னை காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் முதல்வர், முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று ‘BoosterDose’ எடுத்துக் கொண்டேன்.அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தற்போது சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.