கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றி கொள்ளுமாறு தெரிவித்தது.
இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் அருகில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதேபோல, ஒடிசாவில் உள்ள ரிசர்வ் வங்கியில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கவுன்டரில் பலர் வரிசையில் நின்றுள்ளனர். அவர்களிடம் ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் (EOW) விசாரணை நடத்தியுள்ளனர்.
ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.! ரிசர்வ் வங்கி
இந்த விசாரணை குறித்து கூறிய போலீசார், “சிலர் மற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாக தகவல்கள் வெளியானது. இதனால் நாங்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்து, பணம் மாற்ற கவுன்டரில் வரிசையில் நிற்கும் நபர்களின் ஆதார் அட்டையை சரிபார்த்தோம். மேலும் அவர்களின் தொழில் குறித்தும் அவர்களிடம் கேட்டோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
போலீசார் வரிசையில் நிற்பவர்களிடம் விசாரணை நடத்தியது மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்தனர். இதற்கிடையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை 97% க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.