பல இடையூறுகளுக்கு பின் எளிமையாய் நடந்தது போராளி “நந்தினி” திருமணம்!

மது ஒழிப்புக்கு எதிராக தனி ஒருவராய் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த போராளி நந்தினி அவர்களது திருமணம் இன்று எளிமையாய் நடந்து முடிந்தது. நந்தினி – குணா ஜோதிபாசு இவர்களது திருமணம் மதுரை அருகே தென்னமல்லூரில் உள்ள கோவிலில் வைத்து இன்று நடந்தது.

2014 ஆண்டு முதல் தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருபவர் நந்தினி. இதுவரையில் பல போராட்டங்களை தனி ஒருவராய் நடத்தி வந்த இவர் மீது காவல் துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில், ஒரு வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது “மது போதை பொருளா இல்லையா ? போதை பொருளாய் இருந்தால் அரசு விற்பனை செய்வது குற்றம் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார்” இதனை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா.

இதனால்,கடந்த 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடத்த இருந்த நிகழ்வு தடைபட்டது. ஜாமின் பெற எவ்வளவு முயற்சித்தும் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. நேற்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஜாமினில் வெளிவந்த நந்தினி இன்றைய தினம் மிகவும் எளிமையாய் தம் குலதெய்வ கோவிலில் வைத்து குணா ஜோதிபாசுவை திருமணம் செய்துகொண்டார்.