அதிரடி…494 கஞ்சா வழக்குகள்;முதல் முறையாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் – தென்மண்டல ஐஜி எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்திருந்தது.இதுபோன்று,6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும்,கஞ்சா பதுக்கல்,விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு,சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில்,தமிழகத்தில் கஞ்சா வழக்கில் 200 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,கஞ்சா வழக்கில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்,கஞ்சா வேட்டை 2.O-ன் கீழ் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல்,விருதுநகர்,தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன எனவும்,மேலும்,கஞ்சா கடத்தல்,கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல்,கஞ்சா மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் எனவும் தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக,மாநில எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்,கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தென்மண்டல ஐஜி அறிவுறுத்தியுள்ளார்.

 

Leave a Comment