இனிமேல் கொரோனா தடுப்பூசி போட ஆதார் கட்டாயம் இல்லை….!

இனிமேல் கொரோனா தடுப்பூசி போட ஆதார் கட்டாயம் இல்லை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்றும், ஆதார் இல்லை என்றால் தடுப்பூசி போட மறுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது.

மத்திய அரசு, தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் முன் பதிவு செய்வதற்காக கோவின் என்ற பிரத்தியேக ஒரு இணையதளத்தை உருவாக்கியது.இதில், முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யும் பயனாளியின் ஆதார், ஓட்டுரிமை உள்ளிட்டவை கேட்கப்படுகிறது. அப்படி ஆதார் அடையாள அட்டை இல்லை என்றால், தடுப்பூசி போட மறுக்கப்படுவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன.

இந்நிலையில், இது குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சேவைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படுத்துவதற்காக ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண் இல்லாததால் மாற்று வழிகள் மூலம் பொது மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆதார் சட்டத்தின்படி ஆதார் எண் இல்லை என்பதற்காக பொதுமக்களுக்கு எந்த ஒரு அத்தியாவசியத் தேவைகளும் மறுக்கப்படக்கூடாது. ஆதார் எண் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தடுப்பு மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட காரியங்கள் மறுக்கப்பட கூடாது.

அவர்களிடம் ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆதார் சட்டம் 2016-ன் படி சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறை அந்த நபருக்கான சேவையை கட்டாயம் வழங்க வேண்டும். அவ்வாறு சேவை மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.