Minister Udhayanidhi Stalin - Supreme Court of India

சனாதன விவகாரத்தில் உச்சநீதிமன்ற நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படும்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.!

By

சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அவர், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

   
   

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சனாதனம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளனர். சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சனாதன சர்ச்சை விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சனாதன சர்ச்சை குறித்து இன்னும் உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்தவுடன் உரிய விளக்கம் அளிப்போம். நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Dinasuvadu Media @2023