டிச.18ல் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” – திமுக அறிவிப்பு

டிச.18ல் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” – திமுக அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,  ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு. வேளாண் சட்டங்களி திரும்பப் பெறக் வலியுறுத்தி, கடந்த 19 நாட்களாக, அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.

நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் விவசாயிகளை அவமதித்திடும் வகையில், அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்ணை பேசியிருப்பதற்கும், மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும், தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகளின் போராட்டத்தை அவமதித்து வரும் மத்திய பா.ஜ.க அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல், மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் இருக்கும் முதல்வர் பழனிச்சாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது.  போராடி வரும் விவசாயிகளுக்காக, திமுக தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து,  மத்திய அரசை மற்றும் மாநில அரசை கண்டித்தும், வரும் 18 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube