ஒமைக்ரானை விட 10% வேகமாக பரவும் – WHO எச்சரிக்கை!

இங்கிலாந்தில் XE எனப்படும் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் நீடித்து மக்களை பெரிதும் பாதித்த நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும்,தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குறைந்து வருகிறது.இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

புதிய வகை கொரோனா – 10 சதவீதம் வேகம்:

இந்நிலையில்,இங்கிலாந்தில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. XE எனப்படும் இந்த புதிய வகை தொற்றானது ஒமைக்ரானை விட 10 சதவீதம் வேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முதன் முதலில் எங்கு பரவியது :

இந்த புதிய திரிபு XE வகை வைரஸ் ஆனது ஒமைக்ரானின் BA 2 துணை மாறுபாட்டை விட 10 சதவீதம் வேகமாக பரவக்கூடியதாகத் தோன்றுகிறது என்றும்,இருப்பினும்,இந்த கண்டுபிடிப்புக்கு மேலும் உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது” என்றும் உலக சுகாதார அமைப்பு மேலும் கூறியது.

இதற்கிடையில்,XE முதன்முதலில் ஜனவரி 19 அன்று தங்கள் நாட்டில் கண்டறியப்பட்டது என்றும்,XE வகையில் 637 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் பிரிட்டனின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதனால் உருவாகிறது?:

XE என்பது BA 1 மற்றும் BA 2 ஒமைக்ரான் தொற்றுகளின் “மறுசீரமைப்பு(recombinant)” ஆகும். ஒரு நோயாளி கொரோனா தொற்றால் பல வகைகளில் பாதிக்கப்படும்போது இந்த மறுசீரமைப்பு மாற்றங்கள் வெளிப்படுகின்றன என்றும்,இந்த மாறுபாடுகளை நகலெடுக்கும் போது அவற்றின் மரபணுப் பொருளைக் கலந்து புதிய திரிபை உருவாக்குகின்றன என்றும் இங்கிலாந்து நிபுணர்கள் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.