அதிமுகவில் நடக்கும் எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான் …!திவாகரன் பகீர் தகவல்
சசிகலா செய்த முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க தற்போது முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் அணிக்கு சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் அழைப்பு தொடர்பாக மதுரையில் அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பதவி பறிக்கப்பட்ட 18 பேரையும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் திரும்ப அழைத்திருப்பது மகிழ்ச்சியான செயல். ஆனால் யாரோ அவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள்.சசிகலாதான்அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் ஆவார். அவர் எடுத்த தவறான முடிவுகள்தான் இந்த பிரச்னைகளுக்கான காரணம்.சசிகலா செய்த முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது.
ஆனால் நான் ஒருபோதும் அதிமுகவிற்கு இடையூறாக இருந்தது கிடையாது. நானும்தான் ஒரு கட்சியை நடத்துகிறேன். எப்போதாவது அதிமுகவோடு சண்டை போடுகிறேனா? ஆனால் எப்போது பார்த்தாலும், டிடிவி தினகரன் அதிமுகவுடன் சண்டை போடுவதும், அதை கைப்பற்றுவதும்தான் அவருடைய எண்ணமாக இருக்கிறார். எங்கள் இயக்கத்தில் இருவர் இருந்தால் கூட சரி , அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.