திருப்பரங்குன்றம்- திருவாரூரில் நாங்களே வெற்றி பெறுவோம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…
திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவையில் மாவட்ட அண்ணா டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்க துவக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கனமழை, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆயத்த பணிகளை கண்காணிக்கவும், துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் உள்ளாட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் துறைகளை இணைத்து கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு மாவட்டங்களிலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித் தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தும், அந்தந்த மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகளையும் எடுத்து வரப்பட்டுள்ளது. மேலும் தூர்வாரும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. மழை அதிகமாக வரக்கூடிய சூழலில் பொது மக்கள் தங்க நிவாரண முகாம்களும் அங்கு அவர்களுக்கு போதிய உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ பரிசோதனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒற்றுமையாக கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.கழக தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதேபோல் திருவாரூரிலும்நாங்களே வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
DINASUVADU