#BREAKING: சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் இயங்க தடை- மாநகராட்சி அதிரடி ..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்டதளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இஆ.ப அவர்கள் பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.காப., ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று (30.07.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31072021 (சனிக்கிழமை) முதல் 09.082021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

மேலும், கொத்தவால் சாவடி மார்கெட் 01-08-2021 (ஞாயிற்று கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி மற்றும் காவல்துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளின்படி பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர்கள்திருஆர்.கண்ணன், இகாப, (தெற்கு) திருத.செந்தில்குமார், இகாப. (வடக்கு), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு விஷு மகாஜன், இஆப. துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்-மனிஷ், இஆப, மாநகர வருவாய் அலுவலர் மற்றும் வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan