ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தாத 9 ராஜ்ய சபா எம்.பிக்கள்..!

ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தாமல் 9 மாநிலங்களவை எம்.பிக்கள் இருப்பதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. 

ஒன்பது மாநிலங்களவை எம்.பிக்கள் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தவில்லை. மேலவையில் உள்ள 232 எம்.பிக்களில் இதுவரை 179 எம்.பிக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் அமர்வுக்கு முன்னதாக அனைத்து எம்.பிக்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார். கொரோனா தொற்று காரணத்தால் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருந்தது.

வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கும் பருவமழை கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஒன்பது ராஜ்ய சபா எம்.பிக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தவில்லை. ஜூன் 18 ஆம் தேதி வரை கிடைத்துள்ள தரவுகள்படி, மாநிலங்களவை உறுப்பினர்கள் 39 பேர் முதல் டோஸ் பெற்றிருப்பதாகவும், 5 பேர் சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், மக்களவை உறுப்பினர்களில் 320 எம்.பிக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுகொண்டுள்ளனர். 124 எம்.பிக்கள் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். மேலும், 96 எம்.பிக்கள் ஒரு டோஸ் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்று வெளியிட்டுள்ளது.