தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,41,993 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,55,639 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,811 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 60 பேரில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,058 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 517 பேரும், திருவள்ளூரில் 521 பேரும், மதுரையில் 378 பேரும், கோவையில் 382 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.