முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய திட்டங்கள்…! முழுவிபரம் இதோ…!

கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய திட்டங்கள் பற்றிய முழுவிபரத்தை காண்போம்.

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 6 முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1.சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை:

ஏழை,எளியோர் ஏற்றம் பெற,தம் வாழ்நாளில் கலைஞர் அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி,தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

2.சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில்,ரூ.70 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம்:

புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

3. கலைமாமணி விருதை போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‛இலக்கிய மாமணி’ விருது :

இயல், இசை,நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது.அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க வழங்கப்படும்.

4.உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில்,தமிழக அரசு மூலமாக வீடு:

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

5.திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள்: 

திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும்,விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும்.

விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

6.மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயண சலுகை:

மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள்

அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.