கர்நாடகாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள் …!

கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு வீசப்பட்ட நிலையில், 46 குரங்குகள் உயிரிழந்துள்ளது. 

கர்நாடகாவிலுள்ள ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோணிப்பைகளில் கட்டி போட்டு சக்லேஷ்பூர் மற்றும் பேகூர் இடையே உள்ள சாலையில் வீசி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கோணிப்பைக்குள் இருந்த 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த குரங்குகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், மீதமுள்ள 46 குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கர்நாடக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal