தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 45 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 833 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,93,299 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல், தமிழகத்தில் குறையத் தொடங்கிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் 4,134 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,55,170 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 45 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,825 ஆக அதிகரித்துள்ளது.

இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 25 பேர் மரணமடைந்தனர். இன்று கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னையில் இன்று 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,569 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 பேர் வரை குணமடைந்து வருவது, மக்களிடையே சற்று ஆறுதலித்து வருகிறது.