எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 43 பேர் பலி பலர் படுகாயம்
எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 43 பேர் பலி பலர் படுகாயம்
அலெக்ஸாண்ட்ரியா: எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றிரவு ஒரு ரயில் தலைநகர் கெய்ரோவில் இருந்து புறப்பட்டது. மற்றொரு ரயில் கோர்சித் பகுதியில் உள்ள போர்ட் செய்ட்டில் இருந்து கிளம்பியது. இந்த இரண்டு ரயில்களும்அலெக்ஸாண்டிரியா அருகே வந்த போது நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் 29 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. படுகாயங்களுடன் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போதையை நிலவரப்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த ரயில் விபத்து சம்பவத்துக்கு எகிப்து அதிபர் எல்-சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்து இது தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மாற்றி போடப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.