மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் சிறப்பு பகிர்வு.!

தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஆளுமை முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1957 முதல் தான் முதன் முதலில் போட்டியிட்ட சட்ட மன்ற தொகுதியான குளித்தலை முதல், இறுதியாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருவாரூர் தொகுதி வரையில் இதுவரை தோல்வியை சந்திக்காதவர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள்.

1957இல் கருணாநிதி அவர்களின் கதை, வசனத்தில்  அரங்கேறிய தூக்குமேடை என்கிற நாடகத்தை பறித்துவிட்டு அசந்துபோன நடிகவேள் எம்.ஆர்.ராதா இவருக்கு ‘கலைஞர்’ எனும் பட்டத்தை அளித்தார். அன்று முதல் தற்போது வரை தனது தொண்டர்களால் கலைஞர் கருணாநிதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவிவகித்துள்ளார். தமிழகமுதல்வராக பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு அளித்துள்ளார்.

இவருக்கு மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி என 6 பிள்ளைகள் உள்ளனர். அறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அண்ணாவின் மறைவுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை சிறப்பாக வழி நடத்தி வந்தார் கலைஞர் கருணாநிதி. அவரது மறைவுக்கு பிறகு கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தை முன்னின்று வழி நடத்தி வருகிறார்.

இவர் 75 திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் ஆகியவற்றை எழுதி தமிழ் மொழிக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

ஜூன் 3, 1924ஆம் ஆண்டு பிறந்த கலைஞர் கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7இல் இயற்கை எய்தினார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகான வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது என்கிற நிதர்சனமான உண்மை இவரின் அரசியல் ஆளுமைக்கு சான்று.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.