குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு – 2 போலீசார் உயிரிழப்பு!

  • பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
  • இந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் தற்பொழுது வரை போலியோ பாதிப்பு காணப்படுவதால் இந்த ஆண்டுக்குள் போலியோவை ஒழிக்கும் விதமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவதற்கு எதிர்ப்புகளும் எழும்பி வருகிறதாம்.

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்படுவதற்கு பின்லேடன் தொடர்பான தகவல்களை சேகரிக்க அவன் தங்கியிருந்த பகுதிகளில் போலியோ தடுப்பூசி முகாம்கள் பொய்யாக நடத்தப்பட்டதாகவும், எனவே இதுபோன்ற போலியோ முகாம் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாதிகள் கூறுகின்றனராம். இதன் காரணமாக போலியோ முகாம் எங்கும் நடக்க விடாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் போலன் மாவட்டத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு சென்று இருந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு தங்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்கு போலீசார் முற்பட்டபோது துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்புக்காக வந்த இரண்டு போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த போலீசாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Rebekal