அசாமில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த 18 யானைகள்…!

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால் வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவுதான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தில் தலைமை வன காப்பாளர் அமித் ஷாகே  அவர்கள் கூறுகையில், அசாமின் எல்லைப்பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங்  எல்லையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.  புதன்கிழமை இரவு அங்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது இரண்டு கூட்டங்களாக இருந்த 18 யானைகள் இறந்துள்ளன. ஆனால் எங்களுக்கு நேற்றுதான் தகவல் கிடைத்தது.

14 யானைகள் வனப் பகுதியின் மேல் பகுதியிலும், நான்கு யானைகள் வனப் பகுதியின் கீழ் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கி அதில் இருந்து வந்த அதிக மின்னழுத்தம் மூலம் யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யானை உடற்கூறு ஆய்வு செய்த பின் தான் இது குறித்து உண்மையான காரணங்கள் தெரியவரும் என்றும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் கூறுகையில், யானைகள் பொதுவாக மழைக்காலத்தில் பெரிய மரங்களின் கீழ் கூட்டமாக நிற்கும். அவ்வாறு நின்று கொண்டிருக்கும்போது மரத்தில் மின்னல் தாக்கி இருக்கலாம் .மின்னல் அதிக சக்தியுடன் தாக்கும்போது கூட்டமாக யானைகள் இறக்க வாய்ப்புள்ளது என்றும், உயிரிழந்த யானைகளில் எத்தனை ஆண் யானைகள், பெண்யானைகள் மற்றும் எத்தனை பெண் யானைகள் கர்ப்பமாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.