ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட வேலை விண்ணப்பம் – ஏலம் ..!

ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட வேலை விண்ணப்பம் – ஏலம் ..!

ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு எழுதிய வேலைக்கான விண்ணப்பம் ஏலத்திற்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனரும்,தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பித்த,விண்ணப்பக் கடிதம் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளது.இந்த முறை என்.எப்.டி. என்ற டிஜிட்டல் டோக்கன் பதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ‘உலகின் முதல் டிஜிட்டல் ஆவணம்’ என்று கூறப்படுகிறது.

விண்ணப்பம்:

அந்த விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக ஆங்கில இலக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும்,தொழில்நுட்பம் போன்றவற்றில்  சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் போன்றவற்றில் ஆர்வம் உள்ளதாகவும்,தன்னிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால்,அதில் எந்த வேலை, எந்த நிறுவனம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறவில்லை. இருப்பினும்,அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கம்யூட்டர் நிறுவனம் என்பதை குறிப்பதாகவே உள்ளது. அவர் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனவே,விண்ணப்பத்தை வாங்க  https://stevejobsjobapplication.com/  என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,லண்டனை தளமாகக் கொண்ட தொழிலதிபர் ஆலி ஜோஷி ஏற்பாடு செய்துள்ள இந்த ஏலம் ஜூலை 28 ஆம் தேதி முடிவடைய உள்ளது.

ஏலம்:

2018 ஆம் ஆண்டு ஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டது.அப்போது 1,75,000 டாலர் மதிப்பிற்கு ஏலம் போனது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் அப்போது ஏலத்தில் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து,மார்ச் 2021 இல் சார்ட்டர்ஃபீல்ட்ஸ் ஏலத்தில் 224,750 க்கு ஏலம் போனது.இதனை வாங்கியவர் தற்போது ஏலத்தை நடத்தும் ஆலி ஜோஷி என்பவரேதான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் யார்:

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு அமெரிக்க தொழிலதிபர், ஊடக உரிமையாளர் மற்றும் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் தலைவர்.இவர் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் வாஸ்னயிக்,ரொனால்ட் வேய்ன் ஆகியோருடன் இணைந்து 1976 ஆம் ஆண்டு நிறுவினார்.தற்போது ஆப்பிள் நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்,ஐ-பேட்,ஐ-போன், ஐ-பாட் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னிலையில் உள்ளது.

இதன்பின்னர்,1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் நெக்ஸ்ட் எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப நிறுவனத்திற்கு அழைத்துக் கொண்டது.

ஆப்பிள்-பெயர்க்காரணம் :

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது,ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.மேலும்,தனது காதலியான பிரென்னன் என்ற பெண்ணுடன் காதலித்த இடமும் இந்த ஆப்பிள் தோட்டம் தான். அதன் நினைவாகவே,தனது நிறுவனத்திற்கு “ஆப்பிள்’ என பெயர் சூட்டினார்.

இந்தியா வருகை:

1974 ஆம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று ‘நீம் கரோலி பாபாவை’ தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறியஸ்டீவ் ,அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார்.இதுவே அவர் புத்த மதத்தை தழுவக் காரணமாக அமைந்தது.

இறப்பு:

புதிய தொழில்நுட்பம், அப்டேட் என தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார்.

Join our channel google news Youtube