ரஷ்யாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி.. தனது மகளுக்கு செலுத்தியதாக அதிபர் புதின் அறிவிப்பு!

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்ததாகவும், அதனை தனது மகளுக்கு செலுத்தியதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

 கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும்  உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் மாதம்  பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்ததற்கு அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதம் கொண்டார். மேலும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட தகவலை ரஷ்ய அமைச்சர்களுக்கு காணொலி வாயிலாக இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அந்த தடுப்பூசிகள், செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.