புதுவை கவர்னரை கண்டித்து இந்து முன்னணியினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..!

புதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு நகர தலைவர் சிவமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுச் செயலாளர் முருகையன், புதுவை மாநில தலைவர் சனில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்துக்களுக்கு தீபாவளி விருந்து, பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் விருந்து வழங்காமல் கவர்னர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டினர்.

அவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே புதுவை கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், சுகுமாறன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசுத்துறை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இஸ்லாமியர்கள் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர்களில் 50-க்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். மற்றவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.

மேலும் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment