பீகாரில் பள்ளி, டெல்லியில் நீட் பயிற்சி ! சர்ச்சைக்கு ஆளான முதலிடம் பிடித்த மாணவி..!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.
இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெகுலர் முறையில் படித்தது தெரியவந்துள்ளது.
2 ஆண்டுகளாக டெல்லியில் நீட் பயிற்சி பெற்று வந்த அவர், பீகாரின் ஷெயோகரில் உள்ள பள்ளிக்கு எப்படி வந்து தினமும் பாடங்களை கவனித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.
இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில கல்வித்துறை பத்தாம் வகுப்பு மற்றும் இறுதி ஆண்டு தேர்வுக்கு வருகைப்பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment