கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா கூறியுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். அவர்களுக்கு மாநில ஆளுநர் வஜுபாய் வாலா ரகசியக் காப்புப் பிரமாணமும், பதவிப் பிரமாணமும் செய்து வைப்பார்.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 இடங்கள் என்றும் ம.ஜ.த.வுக்கு 12 இடங்கள் என்றும் முடிவு செய்யப்பட்ட போதிலும், இலாக்காக்களை ஒதுக்கீடு செய்வதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து, இரு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் டெல்லிக்குச் சென்று 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், இலாகா பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதையடுத்து, வரும் 4 அல்லது 5ம் தேதியில் அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொள்ள குமாரசாமி திட்டமிட்டார். ஆனால், அவ்விரு நாள்களும் கவர்னர் டெல்லி செல்லவிருப்பதால் பதவியேற்பு விழாவை 6-ம் தேதிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று ஜி.பரமேஷ்வரா கூறியுள்ளார்