நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment