ஜெயிலில் சென்னை ரவுடி திடீர் மரணம்.!பொன்னேரி பரபரப்பு..!

திருவொற்றியூர், பூங்காபுரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்த அடைக்கல ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை ஜெயில் சிறையில் இருந்த அடைக்கலராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடைக்கலராஜின் ‘திடீர்’ சாவுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மாரடைப்பால் அவர் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே பொன்னேரி ஆஸ்பத்திரியில் இருந்த அடைக்கலராஜின் உடலை பார்த்து அவரது மனைவி ருக்மணி கதறி அழுதார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறையில் இருந்த கணவர் அடைக்கலராஜை நேற்று மாலை சந்தித்து உணவு கொடுத்து வந்தேன். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். எனவே அங்கு வரும்படி கூறி இருந்தார். அவரை பெயிலில் எடுக்க முடிவு செய்திருந்தோம். இதற்குள் இன்று காலை கணவர் இறந்து விட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் தாக்கியதில் அவர் இறந்து உள்ளார். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment