சிவகங்கையில் முத்தரசன் பேட்டி!பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் …..

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் போராடி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆனால் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்த மறுபரிசீலனை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்க மிக மோசமான நிர்வாகமே காரணம். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து வருகிற 27-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை பயிர் இழப்பீட்டு தொகையும் கிடைக்காமல் போராடி வருகின்றனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது தண்ணீரின்றி பயிர்கள் வாடுகின்றன. எனவே வருகிற 28-ந்தேதி திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவை தெரிவித்து கலந்து கொள்கிறது.
தமிழகத்தில் நகர் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு வரியை உயர்த்தி வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வரி உயர்வை உடனடியாக நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு தற்போது எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது. இதை மாற்றி மத்திய அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை சைக்கிள் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment