சற்றுமுன்: மும்பையில் பலத்த மழை ! பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை..!

கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று காலை 11.30 மணிக்கு மராட்டிய மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டியது.

மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புறநகர் ரெயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இன்று தென்மேற்கு பருவமழை மும்பையை தாக்கும். மித மிஞ்சிய அளவில் மழை கொட்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் மும்பையில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரெயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும். 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மும்பையில் மக்கள் இன்றும், நாளையும் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்த 2 விமானங்கள் ஆமதாபாத் நகருக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பை வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment