கேரளாவில் தொழிற்சங்க தலைவர் திடீர் மரணம் !முதல்வரின் கூட்டத்தில் நடந்ததால் பரபரப்பு..!

கேரளாவில் முந்திரி ஆலைத் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில், முந்திரி தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று கொல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த தொழிற்சங்க தலைவர் இ.காசிம் (வயது 69), திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவரது மறைவினால் கூட்டத்தில் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். முதல்வர் பினராயி விஜயன் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினரான காசிம், தற்போது சி.ஐ.டி.யு.யுடன் இணைந்த கேரளா முந்திரி தொழிலாளர்கள் மைய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். இதுதவிர கேரள மாநில முந்திரி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

அவரது மறைவுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment