குஜராத் தேர்தலில் பாக். தலையீடு ! மோடியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை..!

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி பலன்புர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் டெல்லி இல்லத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசணை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
மோடியின் குற்றச்சாட்டு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் காங்கிரஸ் உடன் கைகோர்த்து செல்வாக்கை காட்ட நினைக்கிறது என பாஜகவின் மற்ற தலைவர்களும் மோடியை தொடர்ந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாகெத் கோகலே என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அனுப்பினார். அதில், மோடியின் குற்றச்சாட்டு எதனை அடிப்படையாக கொண்டது. அதற்கான ஆதாரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் கேட்டிருந்தார்.
மனு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நிலையில், கோகலே மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு பலனாக 30 நாட்களில் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பிரதமர் அலுலவகம் தனது பதிலை கோகலேவுக்கு அனுப்பியுள்ளது.
அதில், அந்த தகவல்கள் (மோடியின் குற்றச்சாட்டு) இந்த அலுவலகத்தில் எந்த பிரிவிலும் இல்லை. பல்வேறு தரப்பில் இருந்து வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் சந்தித்ததற்கு எந்த நம்பகத்தகுந்த ஆவணங்களும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment