கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் – கமலஹாசன்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழக கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். தற்போது இந்த  திட்டம் செயல்பாட்டில் இல்லாத நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தினமும் 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.