கர்நாடகா பெயில் அடுத்து தெலுங்கான பாஸ் ஆகுமா ..!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் கூட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இனி, அந்தக் கட்சி தனது கவனத்தை தெலங்கானா பக்கம் திருப்ப உள்ளது.

இதற்காக தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.

தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகக் கர்நாடக தென்மாநிலங்களில் நுழைவு வாயில் என்று கூறி அமித் ஷா தேர்தலில் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் 104 இடங்களை வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவானதேத் தவிர, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், தெலங்கானாவில் தங்களது கவனத்தை அடுத்தகட்டமாகத் திருப்பப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் கே. லட்சுமண் தெரிவித்துள்ளார்.

அவர் ஹைதராபாத்தில் கூறியதாவது:

”கர்நாடகாவில் எங்களின் கட்சியை வலுப்படுத்தி இருக்கிறோம். அடுத்த கட்டமாக 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தெலங்கானா மாநிலம் பக்கம் எங்களின் கவனத்தை திருப்ப இருக்கிறோம். இது தொடர்பாக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் கடந்த மாதம் டெல்லியில் ஆலோசனை நடத்தினோம்.

அப்போது, அவர் என்னிடம் கூறுகையில், தென் மாநிலங்களில் குறிப்பாக தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாஜக தனது கவனத்தை செலுத்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்காக தெலங்கானா மாநிலத்துக்கு பாஜக தலைவர் அமித் ஷா அடுத்தமாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார், அப்போது தேர்தல் பிரச்சாரம், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.

தெலங்கானா மாநிலத்தில் அமைப்பு ரீதியாக பாஜக வலுவாக இருக்கிறது. மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் பாஜகவை வலுப்படுத்தும் பன்னா பிரமுக்ஸ் திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.

அதாவது வாக்குப்பதிவு மையங்களில் படித்த இளைஞர்களை நியமித்து வாக்கு சிதறாமல் பாதுகாப்பதாகும். இந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தி சிறப்பான வெற்றியைப் பெற்று இருக்கிறோம். அந்தத் திட்டத்தை இங்கும் செயல்படுத்த இருக்கிறோம்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பன்னா பிரமுக் நியமிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. மீதமிருக்கும் தொகுதிகளுக்கான பணிகள் நடந்துவருகின்றன. அதுவும் 2 மாதங்களில் முடிந்துவிடும்.

தெலங்கானா மாநிலத்தில் அடிமட்டத்தில் இருந்து, அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணியை பாஜக செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் தெரிவித்து வருகிறோம். தெலங்கானா வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியுதவிகள், ரயில்வே திட்டங்கள், சாலை வசதிகள் ஆகியவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். குறிப்பாக ஏழைகளுக்கான வீடுகள், கழிவறைகள், இலவச சிலிண்டர் இணைப்பான உஜ்வாலா திட்டம் ஆகியவற்றைக் குறித்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்: கோப்புப்படம்

அதேசமயம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அரசின் தோல்விகள், வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றிய விதம், வேலைவாய்ப்பு இல்லாமல் போனது, ஏழைகளுக்கு 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு கட்டிக்கொடுப்பது, தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தாதது குறித்து மக்களிடம் பேசி வருகிறோம்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து வருகிறோம். குறிப்பாக எஸ்சி, பிற்படுத்தப்பட்ட மக்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் கலந்தாய்வு நடத்தித் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிஹார் அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் தெலங்கானாவில் நடக்கும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 இடங்களைக் கைப்பற்றிக் கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment