கடத்திய மகளை மீட்ககோரி மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெற்றோர்..!

தேனி அருகில் உள்ள பண்ணைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). இவரது மனைவி அன்னக்கொடி(40). இவர்களுக்கு பிரியங்கா(17) என்ற மகளும், செல்வராஜ்(16) என்ற மகனும் உள்ளனர். பிரியங்கா பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

சம்பவத்தன்று ராஜாவும், அவரது மனைவியும் வீரபாண்டியில் நடந்த தங்களது உறவினர் வீட்டு வீசே‌ஷத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மகள் பிரியங்கா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். தங்களது புகாரில் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுமார் என்ற வாலிபர் கடத்திச்சென்றிருக்ககூடும் என தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

மகள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் வேதனையில் இருந்த ராஜா, அன்னக்கொடி, மகன் செல்வராஜ் ஆகியோர் இன்று தேனி நேருசிலை அருகே வந்தனர். திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தேனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் தங்கள் மகளை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment