ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு..!

சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.

இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது.

அவ்வாறு முன்னர் தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து, ஸ்வீடன், எத்தியோப்பியா, பொலிவியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, புதிய தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஓட்டெடுப்பு நேற்று நடைபெற்றது.

மொத்தம் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையில் ஜெர்மனி மற்றும் டொமிமிக்கன் ரிப்பப்ளிக் நாடுகள் தலா 184 வாக்குகளை பெற்றன. தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக 183 வாக்குகளும், பெல்ஜியம் நாட்டுக்கு 181 வாக்குகளும் கிடைத்தன.

ஆசிய-பசிபிக் கண்டத்தை சேர்ந்த நாடு என்ற வகையில் ஒரு இடத்துக்கு மாலத்தீவு – இந்தோனேசியா இடையே போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 190 வாக்குகளில் 144 வாக்குகள் இந்தோனேசியாவுக்கு ஆதரவாகவும், 46 வாக்குகள் மாலத்தீவுக்கும் கிடைத்தன. இதன் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பில் இந்தோனேசியா வெற்றிபெற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்குள் நுழைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment