எதையும் செய்யவிடாமல் தடுக்கும் ஆளுநர்..புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் சாடல்…!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரூபாய் நோட்டு மதிப்பு இழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப் பட்டதால் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? மக்களுக்கு பலன்கள் கிடைத்துள்ளதா? என காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் ஆய்வு செய்தோம்.

ரூபாய் மதிப்பு இழப்பு திட்டத்தால் தொழிற் சாலைகள் மூடப்பட்டன, கட்டுமானப் பணிகள், மனை விற்பனை நிறுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் பணப் புழக்கம் இல்லை. வேலை வாய்ப்பு குறைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியபடி பொருளாதாரம் 1.5 சதவீதம் குறைந்து, 2 லட்சம் கோடி பேருக்கு நாட்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ரூபாய் மதிப்பு இழப்பு திட்டத்தை அறிவிக்கும்போது பிரதமர் 50 நாட்களுக்குள் இத்திட்டம் வெற்றிஅடையவில்லை என்றால் மக்கள் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதை ஏற்பேன் என்றார். ஆனால், இதுவரை பதில் அளிக்காமல் வாய் மூடி மவுனமாக உள்ளார்.

நாயுடு முயற்சி
மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க, அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கின்ற நல்ல திட்டத்தை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். இதில் சரத் பவார், பரூக் அப்துல்லா,சரத் யாதவ் ஆகியோரின் சந்திப்பை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்தும் பேசியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறும்.
மத்தியில் ஆளும் பாஜக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையைசெய்து வருகிறது.பத்திரிகை சுதந்திரத்தை பறித்து மிரட்டும் நிலையில் உள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதைப் போல் உள்ளது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற அணிகளும் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும்.

புதுச்சேரியிலுள்ள அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களை நடத்தவும், பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் கொடுக்கவும் ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டது. 2 ஆண்டுகள் தொழிலாளர்கள் சம்பளத்திற்காக ரூ.326 கோடி நிதி கொடுக்கப்பட்டது. அந் நிறுவனங்களின் நட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேவைக்கு அதிகமாக ஆட்களை வைத்ததே காரணமாக உள்ளது. இதை மாற்ற விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் நிறுவனங்களை ஆய்வு செய்து ஆட் குறைப்பு, மூலதனம் அதிகரிப்பு, நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பரிந்துரை களை அளித்துள்ளது. அதைப்டிப்படியாகத்தான் நடை முறைப்படுத்த முடியும்.

மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கான நிதி அதிகாரத்தை முதல்வர், அமைச்சர்கள், செயலர்களுக்கு பகிர்ந்து அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மதிக்காமல் தொழிலா ளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான கோப்புகளை ஆளுநர் பல கேள்விகளை கேட்டு நிராகரித்து வருகிறார்.

காதி போர்டு, பிஆர்டிசி உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்வதற் காக தொடங்கப்பட்டது. லாபம் ஈட்ட முடியாது. ஆனால், லாபம் ஈட்ட வேண்டும் இல்லையென்றால் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி கூறுகின்றார். ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிதியை வழங்க பட்டானூரிலுள்ள நிலத்தை விற்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கும் தடையாக நிற்கிறார். தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கிரண்பேடியின் எண்ணத்தை ஏற்க முடியாது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், அமைச்சர்களுக்கு மக்களுக்கு பதில் சொல்லும் கடமையும், பொறுப்பும் உள்ளது. ஆளுநருக்கு அது இல்லை. ஆளுநர் இங்கு இருப்பார், நாளை எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதிகாரத்தை மீறி செயல்படும் ஆளுநர் குறித்து உயர்நீதிமன்றத்தில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தொடர்ந்து வழக்கில் விரைவில் தீர்ப்பு வரஉள்ளது. அதனால் ஆளுநரின் அதிகார மீறலுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஜிப்மர்
ஜிப்மர் உறுப்பு மாற்றுஅறுவை சிகிச்சை மையம், விபத்தில் உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு திட்டம், வான்வழி ஆம்புலன்ஸ், இதயநோய் மையம் ஆகியவைகளை ஒருங்கிணைத்து சேதராப்பட்டில் கொண்டுவர 50 ஏக்கர் நிலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 1200 கோடி ஆகும். இது தொடர்பாக நான் எழுதிய கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கடிதம் எழுதியுள்ளார். எனவே இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment