எட்டயபுரத்தில் நகைக்கடையில்!!ஓட்டையை போட்டு ஆட்டைய போட்ட!! மர்ம நபர்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 சவரன் தங்கநகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் கடைகள், விடுதியுடன் கூடிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முன்புறம் விஜயலெட்சுமி என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. பின்புறம் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. தங்கும் விடுதிக்கும் – விஜயலெட்சுமி நகைக்கடைக்கும் பொதுவாக ஒரே சுவர் தடுப்பாக இருந்துள்ளது. இதனை தெரிந்து வைத்துக் கொண்ட கொள்ளையர்கள், நேற்று இரவு விடுதி அறைக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர், அறைக்குள் இருந்த சுவற்றை துளையிட்டு, நகைக்கடைக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் கேஸ்வெல்டிங் மூலம் இரும்பு பெட்டகத்தை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்கள், ஹார்டுடிஸ்க் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றுவிட்டனர்.

இன்று காலை விடுதி அறையின் கதவு திறந்திருந்ததை பார்த்த பொதுமக்கள் உள்ளே சென்ற போது, நகைக்கடையின் சுவர் துளையிடப்பட்டு இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக நகைக்கடை உரிமையாளர் வெங்கடேஷ்ராஜாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். வணிக வளாகத்தின் அமைப்பை நன்கு தெரிந்த ஒரு நபர் தான் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியிருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கொள்ளை நடந்துள்ள நகைக்கடைக்கு அருகேயுள்ள மற்றொரு நகைக்கடையில் இரு மாதங்களுக்கு முன்னர் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அதே வணிகவளாகத்தில் மேலும் ஒரு கடையில் கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment