ஈரோடு அருகே விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு!

உணவு தேடிவந்தபோது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனத்திற்குள் விடப்பட்டன. சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து  வந்த 3 காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் நுழைந்தன.

விளைநிலங்கள் வழியாக வந்த யானைகள், மருதவேல் என்பவரின் 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றின் சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறத் தெரியாமல், மூன்று யானைகளும் தவித்துவந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றில் ஒரு பகுதியை தோண்டி, யானைகள் வெளியேறுவதற்கு பாதை அமைத்தனர். அந்த வழியாக வெளியேற்றப்பட்ட 3 யானைகளும், பின்னர் கடம்பூர் வனப்பகுதிக்குள் விரட்டிவிடப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment