அனுமதியின்றி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…!

மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள்  மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் நேற்று எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சிம்சன் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள் மெரினா கடற்கரைச் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகே எதிர்கட்சிகள் ஊர்வலம் சென்றபோது, போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து கல்வீசப்பட்டதில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் குமார் மற்றும் அதிவிரைவுப் படை காவலர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவது, திட்டமிட்ட தாக்குதல், ஆயுதங்களால் தாக்குவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியரை ஆயுதங்களால் தாக்குவது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment